
ஷா அலாம், மே 27 – புத்ராஜெயாவை உள்ளடக்கிய சிலாங்கூர் மற்றும் கூட்டரசு பிரதேசத்திற்கிடையிலான எல்லை நிர்ணய செயல்முறை இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக இறுதி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்ராஜெயா தொடர்பான பெரும்பாலான செயல்முறைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக சிலாங்கூர் மந்திரிபெசர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்திருக்கிறார். இதுவரை, புத்ராஜெயாவில் எல்லை நிர்ணய செயல்முறை முழுமையாக நிறைவடைந்துள்ளது, இதில் Sepang மற்றும் Kuala Langat போன்ற பகுதிகளும் அடங்கும் என்று அவர் கூறினார்.
ஷா அலாம் சுல்தான் சலாவுதின் அப்துல் அஜிஸ் ஷா ( Salahuddin Abdul Aziz Shah ) பள்ளிவாசல் விருந்து மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் ஆசிரியர் தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார்.
எல்லை அளவீட்டுப் பணியை மலேசியாவின் நில ஆய்வு மற்றும் வரைபடத்துறை தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாக Amiruddin கூறினார். எனினும் , கோலாலம்பூரை உள்ளடக்கிய அம்பாங், பெட்டாலிங் ஜெயா மற்றும் சுபாங் போன்ற பல பகுதிகள் தீர்க்கப்படும் நிலையில் உள்ளன. எல்லைகளின் சிக்கலான தன்மை மற்றும் துரித வளர்ச்சி காரணமாக, சம்பந்தப்பட்ட பகுதிகள் குறித்து முடிவு செய்வதில் கூடுதல் கால அவகாசம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பகுதியில் எல்லை நிர்ணயத்தில் இறுதி முடிவு செய்யப்படுவதற்கு முன், இன்னும் விரிவான ஆய்வு தேவைப்படுகிறது, ஆனால் அது ஒட்டுமொத்தமாக தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று அமிருடின் கூறினார்.