
பெங்களூரு, ஏப்ரல்-7-தென்னிந்திய மாநிலம் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தொடர்புடைய முக்கிய மையங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து அங்கு பெரும் பதற்றமான நிலை உருவாகியுள்ளது.
பாதுகாப்புப் படைகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்தப் பகுதிகளில் தேடுதல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இதுவரை எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வேளையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதியை குறிவைத்து கடத்தல் மிரட்டலும் அந்த மின்னஞ்சல்களில் விடுக்கப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சமயத்தில், முக்கிய அரசியல்வாதியின் மகன் குறிவைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் எங்கிருந்து வந்தது என்பதை கண்டறிய இணையக் குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
உளவுத்துறை அதிகாரிகளும் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.



