
கோலாலாம்பூர், பிப்ரவரி-25-பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதியத் தலைவராக டத்தோ ஸ்ரீ Dr சம்சுரி மொக்தார் நியமனம் செய்யப்பட்டிருப்பதை, மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP வரவேற்றுள்ளது.
திரங்கானு மந்திரி பெசாருமான சம்சுரியின் தலைமைத்துவத்தின் கீழ், அந்த எதிர்கட்சி கூட்டணி தொடர்ந்து பீடுநடை போடுமென, MIPP தலைவர் பி. புனிதன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, பெரிக்காத்தான் தலைவராக பெரியப் பொறுப்பை ஏற்பதால், சம்சுரி மந்திரி பெசார் பதவிலிருந்து விலக வேண்டுமென சில தரப்புனர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அது தேவையில்லாத ஒன்று எனக் குறிப்பிட்ட புனிதன், ஒரே நேரத்தில் இரு பொறுப்புகளையும் திறம்பட செய்யும் திறமை அவருக்குண்டு என உறுதியாகச் சொன்னார்.
அவருடன் நெருங்கி பழகிய வகையில், முன்னாள் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் போலவே இந்தியச் சமூகத்தின் நலனில் சம்சுரி மிகுந்த அக்கறைக் கொண்டவர் என புனிதன் சொன்னார்.
இந்நிலையில், இந்தியச் சமூகத்தை நெருங்கி, அவர்களின் மனக்குரல்களை நேரடியாகக் கேட்டு, நாட்பட்ட பிரச்னைகளைக் களைய சம்சுரிக்கும் சமூகத்திற்கும் இடையில் MIPP உறவுப் பாலமாக விளங்கும் என்றார் அவர்.
_“இந்திய சமூகம் தொடர்ந்து முன்னேறி, நாட்டின்எதிர்காலத்தில் தங்களுக்குரிய இடத்தைப் பெறுவதை உறுதி செய்வதில் பெரிக்காத்தான் வழியாக ஒன்றுபட்டிருக்கிறோம்”_ என புனிதன் அறிக்கையொன்றில் கூறினார்.
ஜனவரி முதல் தேதி பதவி விலகிய முஹிடின் யாசினுக்கு பதிலாக, பாஸ் கட்சியின் உதவித் தலைவருமான சம்சுரி பெரிக்காத்தானின் புதியத் தலைவராகியுள்ளார்.



