
புத்ராஜெயா, ஜூன்-28 – ஜூலை 1 முதல் விரிவாக்கம் காணும் SST எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரியிலிருந்து, இறக்குமதியாகும் பேரிச்சம் மற்றும் மாண்டரின் ஆரஞ்சுப் பழங்களுக்கும் விலக்களிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆரஞ்சு – ஆப்பிள் பழங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கூடுதலாக இவ்விரண்டு பழங்களும் வரி விலக்குப் பட்டியலில் சேர்ந்துள்ளன.
SST விரிவாக்கம் குறித்து பொது மக்கள் மற்றும் தொழில்துறையினரிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை அரசாங்கம் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து கணக்கில் எடுத்துக்கொள்வதாக நிதியமைச்சு விளக்கியது.
மக்களின் வாழ்க்கைச் செலவின அழுத்தத்தைக் குறைக்கும் வகையில், தினசரி அத்தியாவசியப் பொருட்களுக்கு மடானி அரசாங்கம் வரி விதிக்கவில்லை என்றும் அது அறிக்கையொன்றில் கூறியது.
அரிசி, கோழி, காய்கறிகள், முட்டை போன்று உள்நாட்டில் உற்பத்தியாகக் கூடிய அல்லது வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகக் கூடிய அத்தியாவசியப் பொருட்களும் அவற்றிலடங்கும்.
செலார், தோங்கோல், சென்சாரு மற்றும் சார்டின் போன்ற உள்ளூர் மீன்கள், உறைந்த, குளிர்ந்த அல்லது புதிய வடிவத்தில் இருந்தாலும், அவற்றுக்கும் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும்.
இறக்குமதி செய்யப்பட்ட பழங்களுக்கும் ஜூலை 1 முதல் 5% விகிதம் உட்பட SST விரிவாக்கமானது, உள்ளூர் விவசாயத் தேவையையும் உணவுப் பாதுகாப்பையும் வலுப்படுத்துவதையும் வியூக ரீதியாக நோக்கமாகக் கொண்டது என நிதியமைச்சு ஏற்கனவே கூறியிருந்தது