
கோலாலம்பூர், ஜூலை-7 – தங்கம் வாங்கும் பொது மக்களே எச்சரிக்கை!
உயர் இரகத் தங்கம் என்ற பெயரில் சந்தையில் போலியான அல்லது கலப்படத் தங்கம் விற்பனை செய்யப்படுவதாக நகை வியாபாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேசிய தங்க நகை வியாபாரிகள் கூட்டமைப்பு மற்றும் மலேசிய இந்திய நகை வியாபாரிகள் சங்கம் இணைந்து விடுத்துள்ள இந்த எச்சரிக்கையில், வெளிநாட்டைச் சேர்ந்த மோசடி கும்பல்கள், 999 தூயத் தங்கம் எனக் கூறி கவர்ச்சிகரமான விலையில் போலித் தங்கத்தை விற்பனை செய்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் தங்கம் போன்ற அடர்த்தியைக் கொண்ட Rhenium மற்றும் Tungsten போன்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றன.
இத்தகைய மோசடியில் ஈடுபடும் நபர்கள், நிரந்தரக் கடை அல்லது முகவரி இன்றி கிட்டத்தட்ட வழிப்போக்கர்கள் போல் செயல்படுவதால், பயனர்கள் எளிதில் ஏமாற்றப்படுகின்றனர்.
எனவே, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யப்படும், சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தங்கத்தை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், அங்கீகரிக்கப்பட்ட நகைக்கடைகளில் மட்டுமே தங்கம் வாங்குவது பாதுகாப்பானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மோசடிகளைத் தடுக்க, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சான KPDN, நகை வியாபாரிகள் சங்கத்துடன் இணைந்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதே சமயம் பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவும், சந்தேகத்திற்குரிய நபர்களிடம் வர்த்தகம் செய்ய வேண்டாம் என்றும் நகை வியாபாரிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.



