
கோலாலம்பூர், பிப்ரவரி 23 – அவசர நிலை அல்லது உடனடி உதவி தேவைப்படும் சூழலில் போலீஸ் நிலையத்திற்கு வந்து புகாரளிப்பவர்கள், உடை ஒழுங்கு விதிகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
2025 டிசம்பர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் இந்த தளர்வு உடனடியாக அமலுக்கு வந்தது. அவசர நடவடிக்கை தேவைப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மறுக்கப்படாமல் இருப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது என உள்துறை துணை அமைச்சர் டத்தோ டாக்டர் ஷம்சுல் அனுவார் நசாரா (Datuk Seri Dr Shamsul Anuar Nasarah) தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்கள், சாலை விபத்துகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பாலியல் பலாத்காரம், கொள்ளை, ஒழுங்கு மீறல், குடும்ப வன்முறை போன்ற மனஅழுத்தம் அல்லது மன உளைச்சல் ஏற்படுத்தும் சம்பவங்களுக்கு இந்த தளர்வு வழங்கப்படுகின்றது. இத்தகைய சூழலில் புகார் அளிப்பவர்களின் பாதுகாப்பிற்கும் நலனிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
அனைத்து போலீஸ் நிலையங்களும் உடை நிலையைப் பொருட்படுத்தாமல் புகார்களை ஏற்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போதைய நிர்வாக உத்தரவு போதுமானது என்றும் புதிய சட்டம் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார்..
இந்த வழிகாட்டுதல், பொதுத் துறை வாடிக்கையாளர் சேவை மேலாண்மையை வலுப்படுத்தும் 2025 ஆம் ஆண்டின் நிர்வாக சுற்றறிக்கையுடன் இணங்க இருப்பதாகவும், தேவைக்கு ஏற்ப அமைச்சுகள் மற்றும் அரசுத் துறைகள் தகுந்த உடை ஒழுங்குகளை நிர்ணயிக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.



