
லண்டன், ஜூன்-16 – இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அரிய எண்ணெய் ஓவியம் அடுத்த மாதம் லண்டனில் ஏலத்திற்கு வருகிறது.
காந்தி உட்கார்ந்து இருக்கும் நிலையில் வரையப்பட்ட ஒரே எண்ணெய் ஓவியமான அது, 1931-ஆம் ஆண்டு அமெரிக்க-பிரிட்டானியரான கலைஞரான கிளேர் லெய்ட்டன் (Clare Leighton) என்ற பெண்ணால் வரையப்பட்டதாகும்.
இந்தியாவின் அரசியல் எதிர்காலம் குறித்து பேசுவதற்காக காந்தி லண்டனுக்குச் சென்றபோது, அவரை சந்தித்த கிளேர் அந்த ஓவியத்தை வரைந்தார்.
இந்து தேசியவாதி ஒருவரால் அந்த ஓவியம் பின்னர் சேதப்படுத்தப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
1989-ஆம் ஆண்டு கிளேரின் மரணத்திற்குப் பிறகு ஓவியம் அவரின் குடும்பத்தாருக்குச் சென்றது.
இந்நிலையில் ஜூலை 7 முதல் 15 வரை இணையத்தில் அது ஏலம் விடப்படுகிறது; 68,000 முதல் 95,000 டாலர் வரையில் அது ஏலம் போகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னெடுத்து சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பலத்த தாக்கம் ஏற்படுத்தியவர்.
அவரை மையமாகக் கொண்டு பத்தாயிரக்கணக்கான கலைப்பணிகள், நூல்கள் மற்றும் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அந்த அரிய ஓவியம் ஏலத்தில் விற்கப்படுவது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.