
தெஹ்ரான், ஜூலை-12 – மத்தியக் கிழக்கு வட்டாரத்தில் பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணையை உடனடியாகவும் மறுஅறிவிப்பு வரும் வரையிலும் மூடுவதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அறிவித்துள்ளது.
அனுமதிக்கப்படாத கடல்வழிப் பாதையில் பயணித்ததாகக் கூறி சைப்ரஸ் நாட்டு சரக்குக் கப்பல் ஒன்றின் மீது ஈரானிய இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் அந்தக் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட வேளையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்கா ஈரானிய இலக்குகள் மீது புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், தங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தால், வட்டாரத்தில் உள்ள எதிரிகளின் புதிய இராணுவத் தளங்களைக் குறிவைத்து மிகக் கடுமையான முறையில் பதிலடித் தாக்குதல் நடத்தப்படும் என்று IRGC எச்சரித்துள்ளது.
உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் 20 விழுக்காட்டைக் கையாளும் இந்த முக்கியப் பாதை மூடப்பட்டுள்ளதால், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
ஈரானின் இந்த கடுமையான நடவடிக்கை தொடருமானால், அது உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டி, கச்சா எண்ணெய் விலையை வரலாறு காணாத அளவிற்கு உயர்த்தக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.



