
காசியாபாத், பிப்ரவரி-5-இந்தியா, உத்தரப் பிரதேசம் காசியாபாத் நகரில் நிகழ்ந்த மனதை உலுக்கும் சம்பவத்தில் 3 சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
12 வயது பக்கி, 14 வயது பிரச்சி, 16 வயது விஷிகா ஆகிய அச்சகோதரிகள், தாங்கள் குடியிருந்த அடுக்குமாடி வீட்டின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தனர்.
முதல் நாள் இரவு அறைக் கதவை பூட்டிகொண்டு, ஒருவர் பின் ஒருவராக மூவரும் பால்கனியிலிருந்து குதித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் ‘மன்னியுங்கள் தந்தையே’ என்ற அர்த்தத்தை கொண்டு வரும் ‘Sorry Papa’ என்று கைப்பட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட குறிப்பும், 8 பக்கங்கள் கொண்ட டையரி ஒன்றும் போலீஸாரால் கைப்பற்றப்பட்டன.
அந்த டையரியில், அவர்கள் கொரியாவைச் சேர்ந்த இணைய விளையாட்டுக்கு அடிமையாகியிருந்தது, தனிமை உணர்வு, மற்றும் பெற்றோரின் கட்டுப்பாட்டால் ஏற்பட்ட மன அழுத்தம் குறித்து குறிப்புகள் இருந்தன.
“என் வாழ்க்கை மிகவும் தனிமையானது” மற்றும் “கொரியாவே எங்கள் வாழ்க்கை, உங்களால் எங்களை விடுவிக்க முடியாது” போன்ற வரிகள் மனதை உருக்கியவை.
2 ஆண்டுகளுக்கு முன் படிப்பைக் கைவிடும் அளவுக்கு சகோதரிகள் மூவரும் இணைய விளையாட்டுக்கு அடிமையாகியிருந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, போலீஸார், இந்த விளையாட்டு task-based அடிப்படையில் இடப்படும் கட்டளைகளை நிறைவேற்றும் Blue Whale Challenge சவாலுடன் ஒத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
அதாவது மாடியிலிருந்து குதிப்பதே அவர்களுக்கு இடப்பட்ட கடைசிக் கட்டளையாக இருக்கலாம் என்ற சாத்தியமும் விசாரிக்கப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாக சிறுமிகளின் பெற்றோரிடமும் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது; என்றாலும் அவர்கள் சந்தேக நபர்களாக அல்லாமல் சாட்சிகளாகவே கருதப்படுகின்றனர்.
இணைய விளையாட்டால் 3 உயிர்கள் போயிருப்பது குடும்பத்தாரையும் சுற்றத்தாயும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.



