Latestமலேசியா

மலாய்க்காரர்களுக்கு துன் மஹாதீர் கூறியது போல மலாய்க்காரர் அல்லாதோருக்கும் ஒரு புதிய ‘குடை’ தேவை என்கிறார் ராமசாமி

கோலாலம்புர், ஜூன்-6 -மலாய்க்காரர்களின் அதிகாரத்தை மீட்டெடுப்போம் என புதிய அமைப்புடன் துன் மகாதீர் புறப்பட்டுள்ள நிலையில், இந்நாட்டில் தங்களின் உரிமைகளையும் நலன்களையும் பாதுக்காக மலாய்க்காரர் அல்லாதோரும் ஒரு புதியக் ‘குடையின்’ கீழ் ஒன்றிணைய நேரம் வந்துள்ளது.

நிலைத்தன்மைற்று காணப்படும் தேசிய அரசியல் நீரோட்டத்தின் சவால்களை எதிர்கொள்ள இது அவசியமென, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி கூறியுள்ளார்.

அரசியல் பேதமின்றி அனைத்து மலாய்க்காரர்காளையும் ஒன்றிணைக்க ‘மலாய்க்காரர்களின் செயலகம்’ (Sekretariat Orang Melayu) என்ற பெயரில் புதிய கூட்டமைப்பை மகாதீர் உருவாக்கியுள்ளது குறித்து கருத்துரைக்கையில் ராமசாமி அவ்வாறு பரிந்துரைத்தார்.

மகாதீரின் இம்முயற்சியை மடானி அரசாங்கத்துக்கு எதிராக ஒரு புதிய வலுவான அரசியல் பலத்தை உருவாக்கும் முயற்சியாகவே தாம் பார்ப்பதாகக் கூறிய ராமசாமி, எனினும் மலாய்க்காரர்கள் அவர் பின்னால் திரள்வார்களா என்பது தெரியவில்லை என்றார்.

இவ்வேளையில் மகாதீரின் முன்னெடுப்பு விமர்சனம் செய்யப்பட்டாலும், அதில் உள்ள கவலை முக்கியமானது.

அதாவது கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் அந்த பெரும்பான்மை இனத்திற்கு அத்தனைப் ‘பாதுகாப்புகளும்’ உத்தரவாதங்களும் வழங்கப்பட்ட பின்பும், அவர்களின் உரிமை குறித்து அந்தப் பெருந்தலைவர் கவலைப்படுகிறார்.

அப்படியென்றால், சீன, இந்திய மற்றும் சபா, சரவாக் பூர்வீக மக்கள் தங்களின் எதிர்காலம் குறித்து மலாய்க்காரர்களை விட அதிகம் கவலைப்பட வேண்டும் என ராமசாமி சுட்டிக் காட்டினார்.

இது உணர்த்தும் இன்னொரு பாடம், இனங்களின் உரிமைகளுக்கு என்னதான் அரசமைப்புச் சட்டத்தில் உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டாலும், அவை முறையாக அமுல்படுத்தப்படாவிட்டால், மலாய்க்காரர்கள் மட்டுமின்றி மலாய்க்காரர் அல்லாத அனைத்து மலேசியர்களையும் அது பாதிக்கும் என்பதே.

எனவே, மலாய்க்காரர்களுக்காக மகாதீர் ‘கவலைப்பட்டு’ புதியக் களமொன்றை அமைத்திருப்பது போன்று, மலாய்க்காரர் அல்லாதோருக்கும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க கட்சி பேதமின்றி ஒரு புதியக் ‘குடை’ தேவை என ராமசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!