
கோலாலம்பூர், மார்ச்-2-மலேசியாவில் பதிவுச் செய்யப்பட்ட அனைத்து கப்பல்களும் Hormuz நீரிணையைத் தவிர்க்க வேண்டும் என்று மலேசிய கடல் துறையான JLM அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரானில் நடத்தி வரும் தாக்குதல்களால் மத்தியக் கிழக்கில் நிலவும் பாதுகாப்பு பதற்றத்தை கருத்தில் கொண்டு இவ்வெச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“அனைத்து கப்பல் இயக்குநர்களும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கப்பல் பயணப் பாதைகளை மறுபரிசீலனை செய்து மீண்டும் திட்டமிட வேண்டும். மேலும், அனைத்துலகக் கடல் அதிகாரிகள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை தொடர்ந்து கவனிக்க வேண்டும்” எனவும் அறிவுறுத்தப்பட்டது.
அதிகரித்து வரும் பதற்றம் கப்பல்கள், பணியாளர்கள், மற்றும் சரக்குகளின் பாதுகாப்புக்கு ஆபத்தாக மாறக்கூடும் என்பதால், உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்.
அதோடு, அனைத்து கப்பல் இயக்குநர்களும் நிறுவன மேலாண்மை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் எனவும் JLM தெரிவித்துள்ளது.
அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து வரும் ஈரான், Hormuz நீரிணையை மூடுவதாக எச்சரித்துள்ளதால், வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகம் தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.



