
புத்ராஜெயா, ஏப்ரல்-8-LPG எனப்படும் திரவமயமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு விலை உயர்த்தப்பட்டதாக வந்த தகவல்களை, உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு மறுத்துள்ளது.
LPG போன்ற கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களின் விலைகளை அரசாங்கத்தின் அனுமதியின்றி இஷ்டம் போல் யாரும் மாற்ற முடியாது என KPDN கூறியது.
வைரலான தகவலில் காட்டப்படும் மறுசீரமைக்கப்பட்ட LPG எரிவாயு விலையானது, வர்த்தக எரிவாயு தோம்புகளுக்கானதாகும்; மாறாக வீடுகளுக்கான மானியம் பெற்ற எரிவாயு தோம்புகளுக்கானது அல்ல என அமைச்சு தெளிவுப்படுத்தியது.
எனவே, இந்த விவகாரத்தில் தொடர்புப்படுத்தப்படும் நெகிரி செம்பிலானைச் சேர்ந்த ஒரு நிறுவனம், 2011 விலைக் கட்டுப்பாடு மற்றும் கொள்ளை இலாப தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமளிக்க அழைக்கப்பட்டுள்ளது.
LPG போன்ற விலைக் கட்டுப்படுத்தப்பட்ட எந்தப் பொருட்களின் விலையேற்றமாக இருந்தாலும், அது குறித்து அமைச்சின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட விதிமுறைகளை மீறும் எந்த நபர் அல்லது நிறுவனத்துக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.



