
கோலாலம்பூர், ஜனவரி-29 – OKU எனப்படும் மாற்றுத் திறனாளி சமூகத்திற்கு முழுமையான சட்ட ரீதியான உரிமைகள் தேவை என, மேலவை உறுப்பினர் செனட்டர் Isaish Jacob வலியுறுத்தியுள்ளார்.
அவர்களை ஆதரிக்க இந்த ஒற்றுமை அரசாங்கம் எடுத்த, எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.
குறிப்பாக PDK எனப்படும் சமூக மறுவாழ்வு அமைப்பின் பங்கேற்பாளர்களுக்கான அலவன்ஸ் தொகை RM300-ராக உயர்த்தப்பட்டது, Prasarana மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச போக்குவரத்து சேவை வழங்குவது, மாற்றுத் திறனாளிகளின் நடமாட்டங்களுக்கு உதவ கூடுதலாக 100 புதிய வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டது, அரசு உயர் கல்விக் கூடங்கள், போலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சமூகக் கல்லூரிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இலவசக் கல்வி போன்ற அறிவிப்புகள் உண்மையிலேயே வரவேற்கத்தக்கவை.
இவை, அரசியல் அர்ப்பணிப்பு இருந்தால் மாற்றங்கள் சாத்தியமென்பதை நிரூபிக்கின்றன என, இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் சொன்னார்.
“நான் செனட்டராக இருந்த 3 ஆண்டுகளில் இதுபோன்ற மாற்றங்கள் கண்கூடு; அதற்காக அரசாங்கத்துக்கு நன்றி கூறுகிறேன்” என்றார் அவர்.
ஆனால், இந்த முயற்சிகள் போதுமானவை அல்ல; மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் சட்டத்தில் உறுதிப்படுத்தப்படாத வரை, உண்மையான நீதியை அவர்கள் பெற முடியாது என செனட்டர் Isaish சுட்டிக் காட்டினார்.



