
வாஷிங்டன், ஜூன்-24- இஸ்ரேலும் ஈரானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு இணங்கியிருப்பதாக, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கடியை தீர்க்க இது அவசியமாகும்.
என்றாலும், தற்போது அவை முன்னெடுத்துள்ள ‘திட்டங்களை’ முடிவுக்குக் கொண்டு வர சிறிது கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
பின்னர் கட்டம் கட்டமாக போர் நிறுத்தம் அமுலுக்கு வருமென தனது Truth Social சமூக ஊடகத்தில் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
இஸ்ரேலும் ஈரானும் புதிய பதிலடி தாக்குதல் குறித்து மாறி மாறி சவால் விட்டுள்ள நிலையில் ட்ரம்பின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த போர் நிறுத்த இணக்கத்தை இஸ்ரேலோ அல்லது ஈரானோ இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
முன்னதாக கட்டாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.
ஈரானின் 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலுக்குப் பதிலடியாக இத்தாக்குதல் அமைந்தது.
ஈரானின் அத்தாக்குதலில் அமெரிக்கா அல்லது கட்டார் பிரஜைகளை உட்படுத்திய உயிர் சேதம் எதுவுமில்லை எனவும் ட்ரம்ப் உறுதிப்படுத்தினார்.
ஈரான் நடத்தியத் தாக்குதல் ‘பலவீனமானது’ என்றும் அவர் கேலி செய்தார்.