மெக்சிகோ ஆட்டத்திற்கு முன் தென் கொரியா பயிற்சி மைதானத்தில் ட்ரோன் கண்டுபிடிப்பு

மெக்சிகோ, ஜூன் 18 – மெக்சிகோவுக்கு (Mexico) எதிரான முக்கிய உலகக் கோப்பை ஆட்டத்திற்கு முன்னதாக, தென் கொரியா காற்பந்து அணியின் பயிற்சி மைதானத்தின் மேல் பகுதியில் அடையாளம் தெரியாத ட்ரோன் ஒன்று பறந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சியின்போது ட்ரோன் கண்டுபிடிக்கப்பட்டது என அணியின் பயிற்சியாளர் கூறினார். எனினும், முக்கிய பயிற்சி தொடங்குவதற்கு முன்பே அது கண்டறியப்பட்டதால் அணியின் தயாரிப்பில் எந்த பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என்றார் அவர்.
சில தகவல்களின்படி, அந்த ட்ரோன் மெக்சிகோ இராணுவத்தால் கீழிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை மெக்சிகோ அதிகாரிகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் அரங்குகள் மற்றும் பயிற்சி மையங்கள் அருகே ட்ரோன் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவுக்கு எதிரான போட்டி சவாலானதாக இருக்குமென்று தெரிவித்த அணியின் பயிற்சியாளர், மெக்சிகோ சொந்த மண்ணில் விளையாடுவதால் அவர்களுக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் என்றும், அதை சமாளித்து சிறப்பாக விளையாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.



