
சுபாங், ஜூன்-5,
நேற்றிரவுப் பெறப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, சிலாங்கூர் சுபாங் ஜெயாவிலுள்ள மோனாஷ் பல்கலைக்கழக (Monash University) வளாகம் பாதுகாப்பானதே என அறிவிக்கப்பட்டு, இன்று ஜூன் 5-ஆம் தேதி மீண்டும் தனது செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பாதுகாப்புச் சோதனைக்குப் பிறகு, அங்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்பதை சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைமையகம் உறுதிப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, இன்று முதல் வளாகம் பாதுகாப்பாக இயங்கலாம் எனப் பல்கலைக்கழக நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜொகூர் பாருவிலுள்ள மோனாஷ் கிளினிக்கல் பள்ளி (Monash Clinical School Johor Bahru) மறுஅறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு, “அவசரநிலை” காரணமாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களை உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு மோனாஷ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் (MUSA) அறிவுறுத்தியிருந்தது.
அவசரக்கால மீட்புக்குழுவினர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சூழ்நிலையைக் கையாளும் பொருட்டு, வளாகம் சுமார் 5 மணிநேரத்திற்கு மூடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



