
பியோங்யாங், மே-27 – வட கொரியா தனது மிகப் பெரியப் போர் கப்பல்களில் ஒன்றை ஏவுவதில் தோல்வியுற்றதால், 3 முக்கிய உயர் அதிகாரிகள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
5,000 டன் கொள்ளளவில் தாக்கி அழிக்கும் போர் கப்பலான Choe Hyon, அந்நாட்டின் மிக முக்கியமான கடற்படை நவீனமயமாக்கல் திட்டமாகும்.
எனினும் மே 21-ஆம் தேதி வெள்ளோட்டம் கண்ட போதே அது தோல்வியடைந்ததால் அரசாங்க அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
Chongjin கப்பல் தயாரிப்பு நிலையத்திலிருந்து ஏவும் போது கப்பலின் முன்பகுதி முழுமையாக நீரில் இறங்காமல் அதன் ஒரு பகுதி நிலத்திலேயே இருந்துவிட்டதை துணைக்கோளப் படங்கள் காட்டின.
அது கடலில் ஏவப்பட்டதை வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் நேரில் பார்த்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போர் கப்பல் தோல்வியடைந்ததால் பெரும் சினமடைந்த கிம் ஜொங் உன், இது அறிவியல் அறியாமையால் ஏற்பட்ட குற்றச்செயல் என சாடினார்.
வட கொரியாவின் இராணுவ ஆற்றலை உலகிற்கு வெளிக்காட்ட எண்ணியிருந்த அவரின் ஆசையில் இத்தோல்வி ‘மண்ணைப் போட்டுள்ளது’.
இது உள்ளபடியே அவருக்கு பெருத்த அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்தே, கப்பல் துறைமுக தலைமை பொறியியலாளர், உடலமைப்புக் கட்டுமானப் பொறுப்பாளர், நிர்வாக துணை மேலாளர் ஆகியோர் அதிரடியாகக் கைதுச் செய்யப்பட்டனர்.
அத்தோல்விக்கு அவர்களே முக்கியப் பொறுப்பாளிகள் எனக் கூறப்படுகிறது.