
லக்னோவ், மே-31 – யாருடைய அணுகுண்டு மிரட்டலும் இந்தியாவிடம் வேலைக்கு ஆகாது என, அதன் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் லட்சக்கணக்கானோர் முன்பு உரையாற்றிய போது, பாகிஸ்தானை அவர் அவ்வாறு மறைமுகமாகத் தாக்கினார்.
“‘ஆப்பரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கையைத் தாக்குப் பிடிக்க முடியாமல் போனவர்கள் அணுவாயுதத்தைக் காட்டி மிரட்டுகின்றனர்; இதற்கெல்லாம் அஞ்சும் நிலையில் இந்தியா இல்லை” என்றார் அவர்.
தனது பாதுகாப்புக்காக இந்தியா மற்ற நாடுகளை சார்ந்திருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது; இப்போது தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளும் ஆற்றலை அது பெற்றுள்ளது; ஆப்பரேஷன் சிந்தூரே அதற்கு சாட்சி என மோடி கூறினார்.
ஆப்பரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் ஆயுத சக்தியை உலகம் கண்டுள்ளது.
குறிப்பாக எதிரியின் எல்லைக்குள் நுழைந்து பேரழிவை ஏற்படுத்திய பிரம்மோஸ் ஏவுகணையை அவர் சுட்டிக் காட்டினார்.
சரியான இலக்குகளில் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன.
எனவே, யாருடைய வாய் ஜம்பமும் இனி இந்தியாவிடம் எடுபடாது.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடரும் என சூளுரைத்த மோடி, 3-அம்ச வியூகத்தையும் அறிவித்தார்.
அதாவது, ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும்; அணுவாயுதங்களை காட்டி வெறும் வாய் சவடால் பேசும் தரப்புகளுக்கு அஞ்சப்போவதில்லை, பயங்கரவாதிகளையும் அவர்களை ஆதரிக்கும் நாடுகளையும் ஒரே தட்டில் வைத்து சமமாக பாவிக்கும் என்பதே அம்மூன்று அம்சங்களாகும்.