
ஜகார்த்தா, ஜூன் 27- கடந்த சனிக்கிழமை, இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய எரிமலையான மவுண்ட் ரிஞ்சானியில், மலையேறும் நடவடிக்கையை மேற்கொண்டபோது, பிரேசிலிய ஆடவர் விழுந்து இறந்த நிலையில், அவரை மீட்டெடுக்கும் பணியில் இந்தோனேசியா மிகுந்த தாமதமாக செயல்பட்டதென்று உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், ட்ரோன் மூலம், மலையேறிய அந்த ஆடவரின் அசையாத உடலைக் கண்ட பிறகு, அவரை வெளியேற்றும் முயற்சிகள் மிக சவாலாக அமைந்ததென்றும் வானிலை மற்றும் நிலப்பரப்பு காரணமாகத் மீட்பு பணியில் தாமதமும் தடைகளும் ஏற்பட்டதென்று உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, பல சவாலைகளைக் கடந்து மீட்புப் பணியாளர்கள் அவரது உடலை கண்டறிந்துள்ளனர் என்றும் மறுநாள் அவரை வெற்றிகரமாக மீட்டெடுத்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இறந்த நபரை சில மணிநேரங்களுக்குள் கண்டறிந்திருந்தால், அவரை காப்பாற்றியிருக்க முடியும் என்று அவரது குடும்பத்தினர் கூறி வருந்தியுள்ளனர்.
இருந்தபோதும் உடலை மீட்டெடுக்க தைரியமாக உதவிய தன்னார்வலர்களுக்கு ஒரு சமூக ஊடகப் பதிவில், அவரது குடும்பத்தினர் நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.