
ஜகார்த்தா, ஜூன்-25 – மலையேறுபவர்களிடையே பிரபலமான இந்தோனேசிய எரிமலைப் பள்ளத்தாக்கில் விழுந்த பிரேசிலிய பெண் சுற்றுப் பயணி, இறந்து கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.
பிரேசில் அரசாங்கமும் இந்தோனேசிய மீட்புப் படையும் அதனை உறுதிப்படுத்தின.
பல நாட்கள் நீடித்த தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகளுக்குப் பிறகு அவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
லோம்போக் தீவில் உள்ள ரிஞ்சானி மலையில் சனிக்கிழமை காணாமல் போன 26 வயது ஜூலியானா மரின்ஸை வெளியேற்றும் முயற்சிகள், சவாலான வானிலை மற்றும் நிலப்பரப்பு காரணமாக முன்னதாக தடைபட்டன.
அதிகாரிகள் அவரது அசைவற்ற உடலை ட்ரோன் மூலம் கண்டறிந்தனர்.
மரின்ஸ் காணாமல் போனதிலிருந்து 1.5 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் குவித்த ஒரு இன்ஸ்டகிராம் கணக்கும் அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியது.
அவரைத் தேடும் முயற்சிகள் குறித்த ஆகக்கடைசி தகவல்களை அவ்வப்போது அது வழங்கி வந்தது.