
கோலாலம்பூர், ஜூன் 11 -ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பெல்டா தலைவர் ஈசா சமாட்டிற்கு ( Isa Samad) வழங்கப்பட்ட “டான்ஸ்ரீ”
விருதை மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் திரும்பப் பெற்றுள்ளார்.
ஜூன் 8 முதல் அமலுக்கு வரும் வகையில், “டான்ஸ்ரீ” விருதைக் கொண்ட ஈசா சாமாட்டின் Panglima Setia Mahkota விருதை திரும்பப் பெறுவதற்கு சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று பிரதமர் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“ஒரு குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு, ஈசா தற்போது சுங்கை பூலோ சிறையில் தண்டனை அனுபவித்து வருவதே இதற்குக் காரணம்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்றவர்களிடமிருந்து கூட்டரசு விருதுகளைத் திரும்பப் பெறுவதற்கான சட்ட விதிகளுக்கு இணங்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் சுட்டிக்காட்டியது.
குற்றம் செய்யும் அல்லது நீதிமன்றங்களால் தண்டிக்கப்படும் எந்தவொரு விருது பெற்றவர்களிடமிருந்தும் கூட்டரசு விருதுகள், பதக்கங்கள் மற்றும் கௌரவங்களைத் திரும்பப் பெறுவேன் என்று சுல்தான் இப்ராஹிம் 2024-ல் விடுத்த எச்சரிக்கைக்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி பெசாரான ஈசா, 3.09 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட ஒன்பது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக 2021-ல் உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்.
அவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 15.5 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.



