
தும்பாட், ஜூன்-29-கிளந்தான், தும்பாட்டில் எவ்வித முறையான அனுமதியுமின்றி பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை வளர்த்து வந்த 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரைப் பொதுத் தற்காப்புப் படையான அதிரடியாகக் கைதுச் செய்துள்ளது.
அவ்வதிரடி சோதனையின் போது, சுமார் 20,000 வெள்ளி மதிப்புள்ள ஒரு செம்பருந்து (Helang Merah), ஓர் ஆந்தை மற்றும் இரண்டு மரநாய்கள் (Musang Pandan) உள்ளிட்ட வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு சுமார் 48,500 வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடக்கக் கட்ட விசாரணையில், அவ்விலங்குகளைக் குவா மூசாங் பகுதியிலிருந்து அந்த இளைஞரின் தந்தை கொண்டு வந்ததாகவும், கடந்த 4 ஆண்டுகளாக அவை அங்கு வளர்க்கப்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
கைதான இளைஞரும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து விலங்குகளும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைக்காகக் கிளந்தான் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் (Perhilitan) ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.



