
கோலாலம்பூர், ஜூன்-29-முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சான MITI அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிமுறைகள் காரணமாக, வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் முழுமையாக இறக்குமதி செய்யப்படும் (CBU) மின்சார வாகனங்களின் (EV) விலை 300,000 வெள்ளி வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிபந்தனைகளின்படி, இறக்குமதி செய்யப்படும் அனைத்து EV கார்களும் குறைந்தபட்சம் 200,000 வெள்ளி CIF மதிப்பையும், 180 கிலோ வாட் (kW) ஆற்றல் திறனையும் கொண்டிருக்க வேண்டும்.
இதன் விளைவாக, உள்ளூர் வரிகள், கலால் வரிகள் மற்றும் விநியோகஸ்தர்களின் இலாப வரம்புகள் சேர்க்கப்படும் போது, சந்தையில் கிடைக்கும் சாதாரண இரக இறக்குமதி இவி கார்களின் விலை 300,000 வெள்ளிக்கும் அதிகமாக உயர்ந்து, மலிவு விலை கார்களுக்கான தட்டுப்பாடு ஏற்படலாம்.
அனைத்துலகக் கார் தயாரிப்பு நிறுவனங்கள் மலேசியாவிலேயே தங்களின் கார்களை உற்பத்தி செய்யும் CKD திட்டங்களை ஊக்குவிக்கவும், நாட்டின் மோட்டார் வாகனத் துறையைப் பாதுகாக்கவும் இந்த வியூக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், தற்போதைய கையிருப்பில் உள்ள கார்களுக்கும், ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட வாகனங்களுக்கும் இந்த புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.



