
அலோர் ஸ்டார், ஜூன்-19 – செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமமின்றி வாகனங்களை ஓட்டி வந்த மூன்று ரோஹிங்கியா ஆடவர்கள், கெடா சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் வசமாக சிக்கினர்.
அலோர் ஸ்டார் பகுதியில் நடத்தப்பட்ட PEWA நடவடிக்கையின்போது, 40 வயதுடைய இரு ரோஹிங்கியா ஆடவர்கள் தனித்தனியாக தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அவர்கள் ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனங்களை இயக்கியதுடன், பயன்படுத்திய வாகனங்களின் சாலைவரி காலாவதியாகியிருந்ததோடு, காப்புறுதியும் இல்லாதது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, பண்டார் பாருவிலுள்ள செர்டாங் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சோதனையில், UNHCR அட்டை வைத்திருந்த ரோஹிங்கியா ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மோட்டார் சைக்கிள் உரிமமின்றி ஓட்டியதுடன், கவனக்குறைவாக வாகனம் இயக்கியதும், வாகனத்தில் பல தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்ததும் தெரியவந்தது.
இந்த மூன்று சம்பவங்களிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக JPJ தெரிவித்துள்ளது.



