
கோலாலம்பூர், ஜூலை.15-சிலாங்கூரில் உள்ள Selayang கிளையில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் திருடியதாகத் தவறாகக் குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் Lotus Malaysia, ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. அச்சம்பவம் குறித்து உள் விசாரணை நடத்திய பின்னரே அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. அச்சம்பவம் தவறாகக் கையாளப்பட்டு விட்டது. சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர், அவரது மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம், மனதார மன்னிப்புக் கோருவதாக அது மேலும் கூறியது.
அனைத்து ஊழியர்களும் நிர்ணயிக்கப்பட்ட சேவைத் தரங்களைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்கும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கும் உரிய நவடிக்கைகளை வலுப்படுத்தி வருவதாக அது குறிப்பிட்டது. இதனிடையே, அச்சம்பவத்தைத் தொடர்ந்து, தனது ஊழியர்களுக்கும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் எதிராக இணையத்தில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது குறித்து அந்நிறுவனம் கவலை தெரிவித்தது. ஒவ்வொரு தனிநபரின் தனியுரிமை, நல்வாழ்வு மற்றும் கண்ணியத்தை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டும் என்றும் அது கேட்டுக் கொண்டது.
Selayang Lotusசில் தமது மனைவி திருடியதாகக் குற்றம் சாட்டி, அவரை 20 நிமிடங்கள் நிற்க வைத்ததாக அக்கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் முன்னதாகக் கேள்வி எழுப்பியிருந்தார். பொருட்களைத் தனது உடைகளுக்குள் மறைத்து வைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



