
கோலாலம்பூர், நவ 25 – இந்திய பிரஜையான காரைக்குடியைச் சேர்ந்த 53 வயதுடைய சிவபெருமாள் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அவரது உடலை தயாகத்திற்கு அனுப்பிவைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக மலேசிய உலக மனித நேயத் தலைவர் டாக்டர் த. கமலநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டு காலமாக சைபர் ஜெயாவிலுள்ள பிரபல கார் நிறுவனத்தின் செர்வீஸ் சென்டரில் கார் கழுவும் வேலை செய்துவந்த சிவபெருமாள் நவம்பர் 17ஆம் தேதி மாலை மணி 4.30 அளவில் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினரிமிருந்து அழைப்பு கிடைத்ததோடு அவரது உடலை அடக்கம் செய்ய தமிழகத்திற்கு அனுப்பிவைக்க உதவும்படியும் அவரது தாயார் கேட்டுக்கொண்டதாக கமலநாதன் கூறினார்.
இதனை தொடர்ந்து போலீஸ் உதவியோடு சிவபெருமாள் வேலை செய்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கும் ஒரு தம்பதியரிடம் தொடர்பு கொண்டபோது அவர்கள் எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கவில்லையென கமலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இறந்த சிவபெருமாளுக்கு மனைவி மற்றும் பிள்ளை இருப்பதோடு இங்கு வேலை செய்தபோது அவரை வேலைக்கு வைத்திருந்த நிறுவனம் வேலை பெர்மிட் வைத்திருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் காப்புறுதி இல்லாத நிலையில் இறந்தவரின் உடலை தமிழகத்திற்கு அனுப்புவைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் சிவபெருமாள் வேலைக்கு வைத்திருந்த நிறுவனமும் தொடர்ந்து மௌனம் காத்து வருவது ஏமாற்றத்தை ஏற்படுத்துவதாக கமலநாதன் தெரிவித்தார்.
இது குறித்து சைபர் ஜெயா போலீஸ் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளதோடு இந்த விகாரத்தில் சரியான தீர்வு காணப்படாவிட்டால் தொழிலாளர் துறை மற்றும் இந்திய தூதரகத்தின் கவனத்திற்கும் கொண்டுச் செல்லப்படும் என கமலநாதன் குறிப்பிட்டார்.



