காவல்துறையின் அதிரடி தேசிய மோசடி தடுப்பு நடவடிக்கை; 1,303 மோசடி சந்தேகநபர்கள் கைது

கோலாலம்பூர், அக்டோபர் 30 –
நாடு முழுவதும் நடைபெற்ற தேசிய மோசடி தடுப்பு மைய (Op Mule NSRC) நடவடிக்கையில், 2,062 மோசடி சந்தேகநபர்களில் 1,303 பேர் வெற்றிகரமாக கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையின் வணிக குற்ற விசாரணைத் துறை (JSJK) தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 22 முதல் 28 வரை நடந்த சோதனை நடவடிக்கையில், சரவாக்கில் 272 பேரும், சபாவில் 200 பேரும், கோலாலம்பூரில் 137 பேரும் மற்றும் சிலாங்கூரில் 115 பெரும் கைது செய்யப்பட்டனர் என்று இயக்குனர் டத்தோ ருஸ்டி முகமட் ஈசா (Datuk Rusdi Mohd Isa) தெரிவித்தார்.
மொத்தம் 778 வழக்குகள் திறக்கப்பட்டதில் 270 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது.
இதற்கிடையில், வேறொரு சோதனை நடவடிக்கையில் 820 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 790 பேர் மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட ‘akaun keldai’ எனப்படும் போலி வங்கி கணக்குகளின் உரிமையாளர்கள் என கண்டறியப்பட்டது.
இந்த வழக்குகளின் மொத்த நிதி இழப்பு 11.59 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது என்றும் டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.



