
கெரிக், ஏப் 24 -கெரிக்கிலுள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தில் சுயஇன்பம் செய்து ஒரு பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய 55 வயது நபரின் நடவடிக்கை சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 25 வயது ஊழியரிடமிருந்து நேற்று மாலை மணி 5.57க்கு தங்களுக்குப் புகார் கிடைத்தாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் Superintendent அப்துல் சமாட் ஒத்மான் ( Abdul Samad Othman)தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அந்தச் சம்பவத்தை ஒரு கைபேசியில் பதிவுசெய்து, சந்தேக நபரைக் கண்டித்ததால், அவர் உடனடியாக அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடிவிட்டார்.
இருப்பினும், சிறிது நேரத்திலேயே சந்தேக நபரைக் கண்டுபிடித்து, விசாரணைக்கு உதவுவதற்காக அவரை போலீசார் கைது செய்தனர்.
அவமதிப்பு ஏற்படுத்தியதற்காக குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 509 மற்றும் 1955 ஆம் ஆண்டு சிறு குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக , இந்தச் சம்பவத்தைக் காட்டும் இரண்டு நிமிடங்கள் மற்றும் 31 வினாடிகள் கொண்ட ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி, சந்தேக நபரின் ஒழுக்கமற்ற செயல்களுக்கு எதிராகப் பொதுமக்களிடையே சினத்தை தூண்டியது.



