
கோலாலம்பூர், டிச 18 – பழம் பொரும் நுலான திருக்குறளுக்கு புதிய விளக்கத்தைக் கொண்டு எழுதப்பட்ட “வள்ளுவர் மறை வைரமுத்து உரை “என்ற நூல் நேற்று கோலாலம்பூரில் ம.இ.கா தலைமையகத்தில் நேதாஜி மண்டபத்தில் அரங்கம் நிறைந்த இலக்கிய ஆர்வலர்கள் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.
கவிப் பேரரசு வைரமுத்து கைவண்ணத்தில் உருவான இந்த நூல் திருக்குறளுக்கு தனித்துவமான ஆழமான உரை நூலாக அமைந்துள்ளது.
படிப்பவர்களை கவரும் வகையில் இலக்கிய சுவையுடன் , தத்துவம் நிறைந்த சமூக வாழ்வோடு திருக்குறளுக்கு புதிய பாணியில் விளக்கம் கொண்ட நூலாக இது திகழ்கிறது.
இந்த நூலை வெளியிட்டுப் பேசிய ம.இ.காவின் தேசிய துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ மு. சரவணன் இந்த நூலில் இடம்பெற்ற ஒவ்வொரு குறளும் மனித வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டியாக இருப்பதோடு இனம், சமயம் , நாடு ஆகிய எல்லைகளைக் கடந்து மனித நேயத்தை முன்னிறுத்தும் வகையில் எழுதப்பட்டிருப்பது அற்புதமானது என புகழாரம் சூட்டினார்.
இதனிடையே வான்புகழ் வள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இந்நூலை மலேசியாவில் வெளியீடு செய்வது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பல இனிமையான திருப்பாடல்களை எழுதியவருமான கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். தமிழுக்கு இரண்டாம் தாய் வீடாக மலேசியா திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் தமிழ் இலக்கியத்திற்காக ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கிவரும் டத்தோஸ்ரீ சரவணனுக்கு கவிப்பேரரசு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டதோடு இந்த நூல் வெளியிட்டு விழாவில் சிரமம் பாராமல் கலந்துகொண்ட அனைத்து இலக்கிய ஆர்வலர்களுக்கும் தனது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியல் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத்
தலைவர் பெ. ராஜேந்திரன், மலேசிய தமிழ் நெறிக் கழகத் தலைவர் திருமாவளவன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.
கடுமையாக மழை பெய்தபோதிலும் கவிப்பேரரசு மற்றும் டத்தோ சரவணன் இலக்கிய சொற்பொழிவை கேட்பதற்காக மாலை மணி ஆறு மணி முதல் இலக்கி ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் நேதாஜி மண்டபத்தில் திரண்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.



