
செப்பாங், மே-27 – உள்ளூர் freelance நாடகத் தயாரிப்பில் பணிபுரியும் போது, போலீஸ் போல ஆள்மாறாட்டம் செய்த முன்னாள் போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
மே 25-ஆம் தேதியன்று சைபர்ஜெயாவின் Lakefront குடியிருப்பு அருகே வழக்கமான குற்றத் தடுப்பு ரோந்துப் பணியின் போது, போலீஸ் நிலையத் தலைவர் ஒருவர் சந்தேக நபர்களை எதிர்கொண்டதைத் தொடர்ந்து இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்கள் வாகனத்தில் பொருட்களை ஏற்றும்போது கைதானதாக, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
சோதனையிட்டதில், பொம்மை துப்பாக்கிகள் உட்பட போலீஸ் தொடர்பான பல்வேறு பொருட்கள் வாகனத்தின் பூட் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
போலீஸ் கூம்புகள், சாலைத் தடுப்பு அடையாளங்கள், சீருடைகள், வெஸ்ட் மேலங்கிகள், பூட்ஸ் காலணிகள், கைவிலங்குகள், பீக்கன் விளக்குகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகள் முதல் பொம்மை துப்பாக்கிகள் உள்ளிட்ட வரை, போலீஸின் அனுமதியின்றி திரைப்படத் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரியவந்தது.
29 முதல் 64 வயது வரையிலான சந்தேக நபர்களே அப்பொருட்களை படக்குழுவினருக்குத் தருவித்துள்ளனர்.
அவர்களில் ஒருவர் ஓய்வுப் பெற்ற சார்ஜண்ட் மேஜர் ஆவார்.
4 மாதங்களாக செயல்பட்டு வரும் அவர்கள், கைதாவதற்கு முன்பு படப்பிடிப்பை முடித்திருந்தனர்.
போலீஸ் படையின் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை அனுமதியின்றி பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகுமென, ஹுசேய்ன் அனைவரையும் நினைவுறுத்தினார்.