ஈப்போ, செப்டம்பர் 23 – ஈப்போ, ஜாலான் கிளேபாங் ரியாவில் (Jalan Klebang Ria), நேற்று இரவு காவல்துறையினரால் நடத்தப்பட்ட Ops Bersepadu Samseng Jalanan எனும் நடவடிக்கையின் போது, சட்டவிரோத சாலை பந்தயங்கள் மீதான ஒடுக்குமுறையில் மொத்தம் 136 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 130 பேர் ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என்ற நிலையில், அதில் 69 பேர் பள்ளி மாணவர்களாவர்.
அந்த 69 மாணவர்களில், 22 பேர், இவ்வாண்டு SPM தேர்வை எதிர்நோக்கவுள்ள படிவம் ஐந்து பயிலும் மாணவர்கள்.
இந்நிலையில், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக 168 சம்மன்கள் வெளியிடப்பட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ அஸிஸி மட் அரிஸ் (Datuk Azizi Mat Aris) கூறியுள்ளார்.
இந்நடவடிக்கையில் 101 மோட்டார் சைக்கிள்களை போலிசார் பரிசோதனை செய்ததோடு, அவற்றில் 20 பல்வேறு குற்றங்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்டன.