
குவாந்தான், மார்ச்-18-பொது இடங்களில் குப்பைகளை வீசுவோருக்காக நாட்டில் ஜனவரி 1 முதல் அமுல்படுத்தப்பட்ட சமூக சேவை தண்டனை (PKM) சட்டத்தின் கீழ், சிகரெட் துண்டுகள் வீசப்பட்டதே அதிகம் பதிவான குற்றமாக திகழ்கிறது.
நீதிமன்றம் சென்ற சம்பவங்களில் 90 விழுக்காட்டுச் சம்பவங்கள் சிகரெட் துண்டுகள் வீசப்பட்டவையாகும் என, திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுத் தூய்மைக் கழகமான SWCorp கூறியது.
இதுவரை 1,042 பேருக்கு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன; அவர்களில் 820 பேர் உள்ளூர் மக்கள், 222 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.
அண்மையில், குவாந்தானில் 3 உள்ளூர் ஆடவர்களும், வெளிநாட்டவர் ஒருவரும் தலா RM300 அபராதம் விதிக்கப்பட்டு, 2 மணி நேர சமூக சேவை செய்ய உத்தரவிடப்பட்டனர்.
இச்சட்டம் தற்போது ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பஹாங், பெர்லிஸ், கெடா, கோலாலாம்பூர், புத்ராஜெயா ஆகிய இடங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
“குப்பை போட்ட கையே, சுத்தம் செய்ய வேண்டும்” என்பதையே இந்நடவடிக்கைகள் வலியுறுத்துகின்றன.
பொது இடங்களை சுத்தமாக வைத்திருக்கவும், மக்கள் மத்தியில் பொறுப்புணர்வை வளர்க்கவும் இது முக்கிய பங்கு வகிக்கிறது.



