
கோலாலம்பூர், மே 30 – இரண்டாவது உலகப் போர் காலத்தில்
சயாம் – பர்மா மரண ரயில் திட்ட நிர்மாணிப்பின்போது உயிரிழந்த ஆசிய வம்சாவளியினருக்கு அஞ்சலி செலுத்தவும், மரண ரயில் பாதையின் நினைவை உயிர்ப்புடன் வைத்திருக்கவும், பாதிக்கப்பட்டவர்களின் 21 குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இன்று காலை 8 மணிக்கு கோலாலம்பூர் ரயில் நிலையத்திலிருந்து தாய்லாந்தின் கஞ்சனபுரிக்கு ( Kanchanaburi ) 1,500 கி.மீ தூர பயணத்தை மேற்கொண்டனர். அவர்களை இந்திய தூதரகத்தின் முதலாவது செயலாளர் ராஜேஸ் மணியில் ( Rajesh H . Maniyil ) வழியனுப்பி வைத்தார். இன்று மே 30 ஆம் தேதி தொடங்கி ஜூன் 5 ஆம் தேதிவரை , 2025 மரண ரயில் தளங்களுக்கு வருடாந்திர யாத்திரை மேற்கொள்கின்றனர். ஜூன் 5 ஆம் தேதி பேங்காக்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நினைவாக நடைபெறும் தேநீர் விருந்து மற்றும் நேதாஜி சுபாஷ் விஷன் தாய்லாந்துடன் கலந்துரையாடல் அமர்வு உள்ளிட்ட 7 நாள் யாத்திரைக்குப் பிறகு விமானம் மூலம் அவர்கள் கோலாலம்பூர் திரும்புவார்கள்.
80 ஆண்டுகளுக்கு முன்னர் அவர்களின் முன்னோர்கள் சரக்கு வண்டிகளில் மேற்கொண்ட 5 நாள் பயணத்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வருவதற்காக இந்த 24 மணி நேர ரயில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது பர்மா வழியாக இந்தியாவை ஆக்கிரமிப்பதற்கான ஜப்பானிய திட்டத்தின் ஒரு பகுதியாக 1942 முதல் 1945 வரை Siam மற்றும் பர்மா காடுகளின் வழியாக ரயில் பாதை அமைக்க ஜப்பானிய ஏகாதிபத்திய இராணுவத்தால் மலாயாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து அணிதிரட்டப்பட்ட பெரும்பாலும் இந்திய தோட்டத் தொழிலாளர்களின் சந்ததியினர் இவர்கள்.
Siam – Burma ரயில் நிர்மாணிப்பு திட்டத்தின்போது ஜப்பானிய படையினரால் வலுக்கட்டாயமாக கொண்டுச் செல்லப்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் இறந்தனர், இதனால் அது மரண ரயில் பாதை என்று அறியப்படுகிறது. மரணம் அடைந்தவர்களில் பலர் ரயில் பாதையில் ஏராளமான வெகுஜன புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் சந்ததியினர், மலேசியாவின் மரண ரயில்வே ஆர்வக் குழு மூலம்,
2018 ஆம் ஆண்டு முதல் மரண ரயில்வேயின் இடங்களுக்குத் தொடர்ந்து வருகை தந்து அவர்களை கௌரவித்து அவர்களின் நினைவை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள். இது அவர்களின் 8வது பயணமாகும், இதை அவர்கள் மரண ரயில்வேக்கு யாத்திரையாகக் கருதுகிறார்கள். அவர்கள் தங்கள் முன்னோர்கள் இறங்கிய பான் பாங் நிலையத்தில் இறங்கி, முன்னாள் போக்குவரத்து முகாம் இருந்த இடத்திற்குச் செல்வார்கள். அடுத்த நாள், வெகுஜன கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட பெயரிடப்படாத பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நினைவு நிகழ்விலும் கலந்துகொள்வார்கள் .