
செபராங் பிறை, செப்டம்பர்-7,பினாங்கில் உள்ள சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டடத்திற்கான பூமி பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு இத்திட்டம் சாத்தியமாகியுள்ளதற்குப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயோவ், கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபாட்லீனா சிடேக் மற்றும் துணை அமைச்சர் வோங் கா வோ ஆகியோருக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
56 வாரங்களில் கட்டி முடிக்கப்படவுள்ள புதியப் பள்ளி கட்டடம், மாணவர்களுக்குக் கூடுதல் வசதிகளுடன் கூடிய சிறந்த கற்றல் சூழலை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சியால் தமிழ் கல்வியின் மேம்பாடு தொடர்ந்து உறுதிச் செய்யப்பட்டு வருவதாக சுந்தராஜு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர், புக்கிட் கெளுகோர் எம்.பி. ராம் கர்பால் சிங், செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் குமரேசன் ஆறுமுகம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
நீண்டதோர் இழுபறிக்குப் பிறகு ஒரு வழியாக சுங்கை பாக்காப் தமிழ்ப் பள்ளியின் கட்டடம் எழும்பவிருப்பது பெற்றோர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியிலும் நெகிழ்ச்சி கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




