பெட்டாலிங் ஜெயா, மார்ச் 13 – தலைநகர், கம்போங் பாருவை, யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய தளமாக பரிந்துரைக்கும் திட்டம் எதுவும் அரசாங்கத்திற்கு இல்லை.
அவ்வாறு செய்வது, அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு திட்டங்களை சீர்குலைத்து விடுமென, கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஜாலிஹா முஸ்தபா கூறியுள்ளார்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கு, அப்பகுதியின் மேம்பாட்டுக்கான திட்டம் ஒன்றை, PKB எனும் கம்போங் பாரு மேம்பாட்டு நிறுவனம் வரைந்துள்ளது.
கம்போங் பாருவின் முழுமையான வளர்ச்சிக்கு அடித்தளமாக அந்த 2040 முதன்மை திட்டம் விளங்குகிறது.
அதே சமயம், கம்போங் பாருவில் வசிக்கும், மலாய் சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதுகாக்கப்படுவதையும் PKB மேம்பாட்டு நிறுவனம் உறுதிச் செய்யும்.
அதனால், கம்போங் பாருவை மலாய் நகர்புற மையமாக மேம்படுத்த அரசாங்கம் பாடுபடுமென ஜலிஹா உத்தரவாதம் அளித்தார்.
தலைநகர், கம்போங் பாருவை யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக என பாசிர் சாலாக், பெரிக்காத்தான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜமலுடின் யாஹ்யா முன்வைத்த கேள்விக்கு ஜலிஹா இவ்வாறு பதிலளித்தார்.