
கோலாலம்பூர், ஜூன் 26 – சைபர்ஜெயாவில் பல்கலைக்கழக மாணவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சந்தேக நபரின் இருப்பிடத்தைக் கண்டறிய, (CCTV) ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். பல்வேறு ஆதாரங்களில் இருந்து ஏற்கனவே சிசிடிவி காட்சிகளைப் பெற்றுள்ளதாகவும், சந்தேக நபரின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக
மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நோர்ஹிஷாம் பஹமான் ( Norhizam Bahaman ) தெரிவித்தார். சந்தேக நபரை அடையாளம் காணவும், அவரது நடமாட்டத்தை கண்டறியவும் இந்த வீடியோ காட்சிகள் பயன்படுத்தப்படும் என அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்குப் பிறகு சந்தேக நபர் அவரது வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுத்ததாக நம்பப்படுவதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலான ஏ.டி.எம் இயந்திரப் பகுதிகளில் சிசிடிவி ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுக்கும்போது சந்தேக நபரின் காட்சிகள் இந்த இயந்திரங்களில் பதிவாகியிருக்கலாம்.காணாமல் போனதாகக் கூறப்படும் பிற பொருட்களில் மடிக்கணினி, கை தொலைபேசிமற்றும் பணம் ஆகியவை அடங்கும்.சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வது உட்பட தகவல்களை போலீசார் இப்போது சேகரித்து வருவதாக அவர் கூறினார்.