
தும்பாட், நவம்பர்-6 – நாட்டுக்குள் கள்ளக் குடியேறிகளைக் கடத்தி வரும் கும்பல்கள்,
அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவ அடிக்கடி தங்களின் யுக்திகளை மாற்றி வருகின்றன.
அவ்வகையில், யாருக்கும் சந்தேகம் வராது என்ற நினைப்பில், Mercedes Benz மற்றும் Nissan Grand Livina கார்களில் 15 மியன்மார் கள்ளக்குடியேறிகள் அண்மையில் கடத்திக் கொண்டு வரப்பட்டனர்.
எனினும் அவர்களின் அம்முயற்சி கிளந்தான், தும்பாட், கம்போங் கோக் கெலியில் முறியடிக்கப்பட்டது.
தகவல் கிடைத்து PGA எனப்படும் பொது நடவடிக்கைக் குழு திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் வீட்டொன்றை முற்றுகையிட்ட போது, அக்கும்பலைச் சேர்ந்த இருவர் தப்பியோடினர்.
ஒருவர் மாட்டிக் கொண்டார்.
அவ்வாடவரின் உதவியுடன், வீட்டுக்கு முன்புறம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சொகுசுக் கார்களையும் சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஒரு பெண் உட்பட 15 மியன்மார் கள்ளக்குடியேறிகள் உள்ளே ஒளிந்திருந்தனர்.
ஒருவரிடமும் முறையான பயணப் பத்திரமோ அடையாள ஆவணமோ இல்லை.
15 பேரும் குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் கைதான வேளை, சந்தேக நபரான 58 வயது உள்ளூர் ஆடவர் மனித விற்பனை மற்றும் ஆள்கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுச் செய்யப்பட்டார்.