
ஸ்ரீ நகர், ஜூன்-25 – இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் போலீஸார் சிலர், திருடனுக்கு காலணிகள் மற்றும் செருப்புகளுடன் மாலை அணிவித்து அரை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மருந்து வாங்கும்போது 40,000 ரூபாய் திருடியதற்காக அந்நபர் பிடிபட்டுள்ளார்.
சட்டையைக் கழற்றி, கைவிலங்கு போட்டு, போலீஸ் ஜீப்பின் முன்புறத்தில் உட்கார வைத்து ஜம்மு நகர வீதிகளில் அந்நபரை போலீஸார் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.
அதோடு, அந்நபர் திருடிய விஷயத்தை ஒலிப்பெருக்கியின் மூலம் பொது மக்களுக்கு அறிவித்த வண்ணம் போலீஸார் சென்றுள்ளனர்.
போலீஸாருடன் உள்ளூர் மக்களும் சிலர் சேர்ந்துக்கொண்டனர்.
திருடனாகவே இருந்தாலும் கூட, இப்படியா ஒரு மனிதனை பொது வெளியில் அவமானப்படுத்துவது என, வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் கொந்தளித்தனர்.
இதையடுத்து, தங்கள் அதிகாரிகள் எல்லை மீறி நடந்துகொண்டிருப்பதை ஜம்மு போலீஸ் நிலையம் ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்தது.
தொழில்முறையற்ற அந்நடவடிக்கையைக் கண்டித்து, சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அது உறுதியளித்தது.
விசாரணை நடத்தி ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென மேலதிகாரிகளும் உத்தரவிட்டுள்ளனர்.