
புத்ராஜெயா, ஜூன்-29 – மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் சைனுடின், அவரின் குடும்பத்தார் மற்றும் பினாமிகளுக்குச் சொந்தமான அறிவிக்கப்படாத சொத்துகளைத் தேடி கண்டுபிடிப்பதில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.
அவ்வகையில் பிரிட்டன் தவிர்த்து மேலும் 5 நாடுகளை அது குறி வைத்துள்ளது.
அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், இத்தாலி, ஜெர்சி தீவு ஆகியவையே அந்த 5 நாடுகளாகும்.
டாய்மும் அவருக்கு வேண்டியவர்களும் மேலும் சில நாடுகளில் சொத்துக்களைப் ‘பதுக்கி’ வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அவற்றை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென MACC வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
MACC-யிடம் அறிவிக்கப்படாத அனைத்து சொத்துக்கள் மீதும் விசாரணை முடியும் வரை, அவற்றை யாரும் ‘தொடாத’ வண்ணம் நீதிமன்ற தடையுத்தரவு பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, MACC கேட்டுக் கொண்டதற்கிணங்க, லண்டனில் டாய்ம் மற்றும் குடும்பத்தாருக்குச் சொந்தமான 700 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகளை முடக்க, பிரிட்டன் அரசு ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.