
புத்ராஜெயா, மே-7- தனியார் மருத்துவமனைகளில் ஆலோசனைக் கட்டணங்களை ஒழுங்குபடுத்தும் 1998-ஆம் ஆண்டு தனியார் சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் சட்டத்தை, அரசாங்கம் மறு ஆய்வு செய்யவிருக்கிறது.
அதற்காக அமைச்சரவை அறிக்கையை தயார் செய்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சுல்கிஃப்லி அஹ்மாட் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.
தொடர்புத் துறை அமைச்சரும் ஒற்றுமை அரசாங்க பேச்சாளருமான டத்தோ பாஹ்மி ஃபாட்சில் அதனை உறுதிப்படுத்தினார்.
இன்னும் ஓரிரு வாரங்களில் அவ்விவகாரம் மீண்டும் அமைச்சரவையின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டு முடிவெடுக்கப்படுமென்றார் அவர்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கீழ் வரும் 2011 விலைக் கட்டுப்பாடு மற்றும் கொள்ளை இலாப எதிர்ப்புச் சட்டம், மருத்துவத் தொழில் தொடர்பாகவும் பயன்படுத்தப்படுவது குறித்து பிரதமர் விளக்கம் கேட்டார்.
அதனைச் சுற்றியுள்ள பிரச்னையை ஆராயுமாறு டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொண்டார்
தவிர, தனியார் மருத்துவமனைகளும் கிளினிக்குகளும் மருந்து விலைப்பட்டியலைக் காட்சிப்படுத்த வேண்டுமென்பதை எதிர்த்து மருத்துவர்கள் பிரதமர் அலுவலகத்தில் மகஜர் சமர்ப்பித்தது குறித்தும் டத்தோ ஸ்ரீ அன்வார் விளக்கம் கோரினார்.
மலேசிய மருத்துவ சங்கம் உள்ளிட்ட தரப்புகள் இச்சட்டத்தின் பயன்பாட்டைக் கேள்வி எழுப்பியிருப்பதால், அதனையும் ஆராய்ந்து தெளிவுபடுத்துமாறு பிரதமர் சொன்னார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஃபாஹ்மி அவ்வாறு கூறினார்