
புத்ராஜெயா, ஜூலை-21- நாட்டின் தலைமை நீதிபதி பதவிக்கான பெயர் பரிந்துரைப் பட்டியல் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப அரசாங்கம் பரிந்துரைத்த பெயருக்கு முன்கூட்டியே மாமன்னர் ஒப்புதல் அளித்து விட்டார்.
ஆனால், அவ்விவகாரம் சர்ச்சையான பிறகும் தாம் மௌனம் காத்ததாக குற்றம் சாட்டுகிறார்கள்; மாமன்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட விஷயம் குறித்து முந்திக் கொண்டு தாம் கருத்துரைப்பது எந்த வகையில் முறையாகும் என, பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்றுகூடலில் உரையாற்றிய போது அன்வார் கேள்வி எழுப்பினார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் படி பிரதமரின் ஆலோசனையைப் பெற்று, மலாய் ஆட்சியாளர்களுடன் கலந்தோலோசித்து, மாமன்னர் தலைமை நீதிபதியை நியமிப்பார்.
அது தான் இங்கு நடந்தது; ஆனால் என்னமோ நீதித்துறையில் தலையீடு நடப்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டு, ஒரு வாரத்திற்கு தம்மை ‘பாடாய் படுத்தி’ விட்டார்கள் என பிரதமர் கூறினார்.
நாட்டின் புதியத் தலைமை நீதிபதியாக மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் (Datuk Wan Ahmad Farid) கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
அவருடன் மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைவராக டத்தோ அபு பாக்கார் ஜாய்ஸ் (Datuk Abu Bakar Jais), சபா – சரவாக் தலைமை நீதிபதியாக டத்தோ அசிசா நவாவியும் (Datuk Azizah Nawawi) நியமிக்கப்பட்டுள்ளனர். மூவரும் வரும் ஜூலை 28-ஆம் தேதி முறைப்படி பதவியேற்பர்.