
கோலாலாம்பூர், ஜூலை-13-தழல் ஊடகத்தின் 14-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு “ஆனந்த தேன்காற்று 2026” என்ற பிரமாண்ட கலை, இசை மற்றும் பண்பாட்டு விழா, கோலாலம்பூரில் அமைந்துள்ள டான்ஸ்ரீ கே.ஆர் சோமா அரங்கில் மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது.
தேசிய கீதத்துடன் தொடங்கிய இந்த விழாவில், 300-க்கும் மேற்பட்ட பொது மக்கள் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் கலந்துகொண்டு அரங்கை நிறைவு செய்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்களின் இனிய பாடல்களும், SSR நடன அகாடமியின் கண்கவர் நடனங்களும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
குறிப்பாக, மலேசியாவின் பழம்பெரும் மாபெரும் கலைஞர் மறைந்த தான் ஸ்ரீ பி. ரம்லி அவர்களின் பாடல்களுக்கு அமைக்கப்பட்ட அஞ்சலி நடனம் ரசிகர்களின் பலத்த கைதட்டல்களைப் பெற்றது.
இவ்விழாவின் முத்தாய்ப்பாக, தழல் மீடியாவின் அதிகாரப்பூர்வ பாடல் வெளியிடப்பட்டது.
முழுக்க முழுக்க AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்தத் கொள்கைப் பாடல், தொழில்நுட்பத்தையும் தமிழையும் இணைக்கும் ஒரு புதிய முயற்சியாகப் பாராட்டுகளைப் பெற்றது.
நாடறிந்த அறிவிப்பாளர் பி.ஆர். ஜெயசீலன் இந்நிகழ்ச்சியைச் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரும், தழல் மீடியாவின் நிறுவனருமான வீரா இளங்கோவன் தனது உரையில், ஊடகங்கள் மக்களின் குரலாகச் சமுதாயப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேவேளை, இன்றைய காலகட்டத்தில் தாய்மொழியான தமிழில் பேசுவதற்குப் பலர் தயக்கம் காட்டுவது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், குடும்பங்களில் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுடன் தமிழில் பேசினால்தான் அடுத்த தலைமுறையினரிடம் நமது அடையாளமும் பண்பாடும் உயிரோடு வாழும் என்று உணர்வுபூர்வமாகக் கேட்டுக்கொண்டார்.
Fadzil Enterprise நிர்வாக இயக்குநர் டத்தோ ஹாஜி ஃபாட்சில், Wawasan GMW Trading நிறுவனரும் நிர்வாக இயக்குநருமான டத்தோ ஸ்ரீ கணேசன், திரு முருகன் ஆலய அறங்காவலரும் சபாக் பெர்ணாம் MGR மன்ற ஆலோசகருமான Dr பெருமாள் முத்தாலி, மலேசிய இந்தியக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவரும், உலகத் தமிழ் கலாச்சார மையத்தின் தலைவருமான டத்தோ Dr. கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்த இந்த விழா, தழல் ஊடகத்தின் 14 ஆண்டுகாலப் பயணத்தில் ஒரு மறக்க முடியாத மைல்கல்லாக அமைந்தது.



