
கோலாலம்பூர், மே-12 – மோசமான தோல் வியாதியால் பாதிக்கப்பட்ட ஒரு பிட்புல் நாய், சிறிய கூண்டில் அடைக்கப்பட்டு பிராணிகள் காப்பகமொன்றின் வெளியே கைவிடப்பட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
150 ரிங்கிட்டுடன் கைவிடப்பட்ட அந்நாய், கூண்டிலினுள் இருந்தவாறு ஏக்கத்துடன் பார்ப்பது வலைத்தளவாசிகளின் இதயங்களை நொறுக்கும் வகையில் உள்ளது.
@sivarathinam_arumugam65 என்ற டிக் டோக் கணக்கில் பதிவேற்றப்பட்ட வீடியோவில், அந்த பிட்புல் நாய் உடல் மெலிந்து பார்ப்பதற்கே மிகவும் பரிதாபமாக இருந்தது.
“அதன் உரிமையாளர் தான் அந்நாயை அங்கு கைவிட்டு சென்றிருக்க வேண்டும்; அதன் தோலைப் பார்த்தாலே அது அனுபவிக்கும் வேதனையை நம்மால் சொல்ல முடியும்” என அந்த டிக் டோக் பயனர் குறிப்பிட்டார்.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள் நாயின் நிலை கண்டு பரிதாபமும், பொறுப்பற்ற அதன் உரிமையாளர் மீது கோபமும் கொண்டனர்.
நோய்வாய்ப்பட்ட பிராணியை கவனிக்க முடியாது என்றால் உங்களுக்கெல்லாம் எதற்கு செல்லப் பிராணிகள்? என பலர் பொங்கி எழுந்தனர்.
150 ரிங்கிட்டை வைத்துச் சென்றுள்ளது எந்த மூலைக்கு? பிராணிகள் காப்பகம் பார்த்துக் கொள்ளும் என்ற எண்ணத்தில் தானே இப்படியெல்லாம் உரிமையாளர்கள் செயல்படுகிறார்கள் என கண்டனங்கள் குவிந்து வருகின்றன.