
தொழில்துறை உறவுகளை வலுப்படுத்தும் இந்தியா–மலேசியா தற்காப்புக் கண்காட்சி
கோலாலாம்பூர், பிப்ரவரி-13,
கோலாலம்பூரில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் நேற்று மினி தற்காப்புக் கண்காட்சி மற்றும் தற்காப்புத் தொழில்துறை கருத்தரங்கமும் நடைபெற்றது.
கோலாலாம்பூரில் உள்ள இந்திய உயர் ஆணையம் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் இந்திய உயர் ஆணையர் BN ரெட்டி பங்கேற்று, இரு நாடுகளின் தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய உரையாற்றினார்.
இந்த ஆண்டு விழாவில் இந்தியா மற்றும் மலேசியாவின் தற்காப்புத் தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன.
சுமார் 14 இந்திய நிறுவனங்களும் 30 மலேசிய நிறுவனங்களும் தங்கள் திறன்கள் மற்றும் தயாரிப்புகளை இதில் அறிமுகப்படுத்தின.
தற்காப்புத் துறையில் இந்திய – மலேசிய ஒத்துழைப்பை இது மேலும் மேம்படுத்துமென, பி.என்.ரெட்டி வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
இந்தியா, தற்காப்புத் துறையில் முன்னணி ஏற்றுமதியாக உருவாகி வருவதாகவும் அவர் சொன்னார்.
இந்நிகழ்வில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், தற்காப்புத் துறை தொடர்பான தகவல் பரிமாற்றம், ஆராய்ச்சிப் போன்ற அம்சங்களில் இரு நாடுகளும் இனி மேலும் அணுக்கமாக ஒத்துழைக்கும் என, தற்காப்பு அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவுக்கான துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ அப்துல் ஹாடி ஓமார் ( Abdul Hadi Bin Omar ) கூறினார்.
இந்தியாவின் தற்காப்புத் தயாரிப்பு துறை மற்றும் மலேசியாவின் தற்காப்புத் தொழில்துறை பிரிவும் இந்நிகழ்வை இணைந்து நடத்தின.



