
கோலாலம்பூர், மார்ச்-28-நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பம் மற்றும் வறட்சியைக் கருத்தில் கொண்டு, நீர் பயன்பாட்டைக் குறைக்க மலேசியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் குளிப்பது மற்றும் அடிக்கடி கார் கழுவுவது போன்ற பழக்கங்கள் நீர் வளங்களுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
எனவே, பொது மக்கள் குளிக்கும் நேரத்தை 50 விழுக்காடு வரை குறைக்குமாறும், தேவையற்ற கார் கழுவுதலைத் தவிர்க்குமாறும், தேசிய நீர் சேவை ஆணையமான SPANனின் முன்னாள் தலைவர் சார்ல்ஸ் சாந்தியாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒரு காரைக் கழுவுவதற்கு மட்டுமே பெருமளவு நீர் பயன்படுத்தப்படுவதால், வாரத்திற்கு மில்லியன் லிட்டர் அளவில் நீர் வீணாகும் நிலை ஏற்படுவதாக அவர் கூறினார்.
தற்போது, ஒவ்வொரு மலேசியரும் தினமும் சராசரியாக 201 லிட்டர் நீரைப் பயன்படுத்துகின்றனர்.
இது, ஐநா பரிந்துரைக்கும் அளவை விட அதிகமாகும் என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், என்னதான் நீர் சேமிப்பைத் தாங்கள் வலியுறுத்தினாலும், அதிக வெப்பநிலையில், மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடித்து உடல்நலத்தைக் கவனிக்க வேண்டும் எனவும் அவர் நினைவுறுத்தினார்.
மழை குறைவதும், வெப்பம் அதிகரிப்பதும் நாட்டின் நீர் வளங்களை மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
இந்நிலை வரும் ஜூன் வரையாவது தொடரும் என மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia தெரிவித்திருப்பது மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது…



