
ரோம், ஜூன்-17 – புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கும் போது ஒரு கலைப் படைப்பை கிட்டத்தட்ட அழித்தே விட்ட 2 நடுத்தர வயது சுற்றுலாப் பயணிகளை, இத்தாலிய அருங்காட்சியகம் ஒன்று தீவிரமாகத் தேடி வருகிறது.
இத்தாலியக் கலைஞர் நிக்கோலா பொல்லாவால் (Nicola Bolla) செய்யப்பட்ட கிறிஸ்டல் படிகத்தால் மூடப்பட்ட நாற்காலியில் அமருவது போல், அவ்விருவரும் ஒருவரையொருவர் புகைப்படம் எடுக்கும் காட்சிகள் CCTV கேமராவில் பதிவாகியுள்ளன.
அந்நாற்காலி ‘உடையக்கூடிய அபாயம் அதிகமுள்ள படைப்பு’ என்பதே அருங்காட்சியகத்தின் கவலைக்குக் காரணமாகும்.
இருவரில், அந்தப் பெண் ‘உட்கார்ந்தாலும்’, Swarovski படிகங்களால் மூடப்பட்டிருக்கும் அந்த வேலைபாட்டை அவர் தொடவில்லை; ஆனால் அவருடன் இருந்த ஆண் அவ்வளவு கவனமாக இல்லை.
அவர் உட்கார்ந்ததும், அவரின் எடை காரணமாக நாற்காலி பின்னோக்கி தடுமாறி வளைந்துபோனது.
இதனால் பதற்றமடைந்து அந்த ஜோடி அறையை விட்டு ஓட்டம் பிடிப்பதை, வார இறுதியில் வைரலான ஒரு வீடியோ பதிவில் காண முடிந்தது.
Palazzo Maffei அருங்காட்சியகம் இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளது.
இந்த சம்பவம் 4 வாரங்களுக்கு முன்பே நடந்ததாகவும், அதன் பிறகு நாற்காலி பழுதுபார்க்கப்பட்டதாகவும் அருங்காட்சியகம் உறுதிப்படுத்தியுள்ளது.