
நியூ ஓர்லியன்ஸ், ஜூன்-12 – அமெரிக்காவின் Spirit Airlines விமானத்தில், விமானப் பணிப்பெண்ணுடன் ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 3 பெண்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
டிக் டோக்கில் முதலில் பகிரப்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
வரிசையாக அமர்ந்திருக்கும் 3 பெண்கள், விமானப் பணிப்பெண்ணுடன் வாக்குவாதம் செய்வதை அவ்வீடியோ காட்டுகிறது.
“விமானம் எங்கு செல்கிறது என்பது கூடவா உனக்குத் தெரியவில்லை?” என அப்பெண்களில் ஒருவர் விமானப் பணிப் பெண்ணிடம் கத்தினார்.
அதற்குக் காரணம், விமானம் செல்லும் இலக்கு நியூ யோர்க் என்பதற்கு பதிலாக அவர் தவறுதலாக நியூ ஓர்லியன்ஸ் எனக் கூறியது தான்.
விமானப் பணிப்பெண் தனது தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்பும் கேட்டு விட்டார்.
பின்னர், அம்மூன்று பெண்களையும் அவர்களின் சாமான்களை தங்கள் முன் இருக்கைக்கு அடியில் வைக்கச் சொன்னார்; ஆனால் அவர்கள் அதைக் கேட்காமல், முடிந்துபோன நியூ ஓர்லியன்ஸ் குழப்பத்தை மீண்டும் எழுப்பினர்.
இதனால் விமானப் பணிப்பெண் பொறுமை இழந்து, விமானத்திலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என அம்மூன்று பெண்களையும் எச்சரித்தார்.
வாக்குவாதம் தொடர்ந்ததால் போலீஸார் வரவழைக்கப்பட்டு, அப்பெண்களை விமானத்திலிருந்து வெளியேற்றும் வரை விமானம் புறப்படுவதில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதம் ஏற்பட்டது.
விமானத்தை விட்டு இறங்க மறுத்த அம்மூவரும் போலீஸாருடனும் மல்லுக் கட்டினர்; “நீங்கள் விமானத்தை விட்டு இறங்கப் போகிறீர்கள், அல்லது சிறைக்குச் செல்லப் போகிறீர்கள்” என ஒரு போலீஸ்காரர் எச்சரித்தப் பிறகே தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு அவர்கள் விமானத்தை விட்டு வெளியேறினர்.
அம்மூன்று பெண்களின் செயலுக்கு வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.