
புக்கிட் மெர்தாஜாம், மார்ச்-13-பள்ளிகளில் தீவிரவாத சிந்தனைகள் ஊடுருவுவதைத் தடுக்க கல்வி அமைச்சான KPM தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மாணவர்களை குறிவைத்து செயல்படும் தீவிரவாத கும்பல்களைக் கட்டுப்படுத்த, சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாக அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறினார்.
சில சம்பவங்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
பள்ளிகள் கல்விக்கான பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்றும், தீங்கு விளைவிக்கும் சிந்தனைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
எனவே KPM தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தி, இளைஞர்களை பாதுகாக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
நாட்டில் தடைச் செய்யப்பட்ட Daesh தீவிரவாதக் கும்பலின் சிந்தனைகளை மீண்டும் உயிர்ப்பிக்க முயன்ற 6 இளைஞர்களை போலீஸ் அண்மையில் கைதுச் செய்தது குறிப்பிடத்தக்கது.
அவர்களில் மூவர் குறைந்த வயதினர் ஆவர்.
இது தவிர்த்து, இளைஞர்களை குறிவைத்து செயல்படும் ஒரு தீவிரவாதக் கட்டமைப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், அது வெளிநாட்டு தீவிரவாதக் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.



