கோலாலம்பூர், நவ 23 – ஒற்றுமை அரசாங்கம் அமைவதற்கு கை கோர்த்த அம்னோ தலைவர்களை முன்பு கடுமையாக எதிர்த்து வந்த பெரிக்காத்தான் நேசனல் தற்போது அவர்கைளை கவர்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாஸ் கட்சியித் தலைவர் அப்துல் ஹடி அவாங் தெரிவித்திருக்கிறார். அவர்கள் அனைவருமே பக்காத்தான் அரசாங்கத்தை ஆதரிக்கவில்லை. எனவே அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என ஹடி தெரிவித்தார். தேசிய முன்னணியின் முதுகெலும்பாக இருந்துவரும் அம்னோ 15ஆவது தேர்தலுக்கு முன் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் DAPயுடன் எந்தவொரு ஒத்துழைப்பை வைத்துக்கொள்வதை நிராகரித்திருந்தது.
இருப்பினும் தேர்தலுக்குப் பின் தொங்கும் நாடாளுமன்றம் சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து பிரதமர் அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட அம்னோ முன்வந்தது. இதனிடையே அடுத்த கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான இலக்கின் ஒரு பகுதியாகவே கெமமான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பெரிக்காத்தான் நேசனலின் வேட்பாளராக திரெங்கானு மந்திரிபெசார் அஹ்மாட் சம்சூரி மொக்தார் நிறுத்தப்பட்டுள்ளதாக பெரிக்காத்தான் நேசனலின் துணைத் தலைவருமான ஹடி அவாங் தெரிவித்தார்.