கோலாலம்பூர், டிச 20 – பேரா பாரிட்டிலுள்ள பொது பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தங்கும் விடுதியில் மூன்று நண்பர்களால் தாக்கப்பட்டதால் காயம் அடைந்தான். 18 வயதுடைய அந்த மாணவன் தனது முகம், கைகள் மற்றும் வயிற்றில் காயம் அடைந்ததாக மத்திய பேராக் போலீஸ் தலைவர் ஹபிசுல் ஹெல்மி ஹம்சா ( Hafezul Helmi Hamzah ) தெரிவித்தார். சம்பந்தப்பட் அந்த மாணவன் மருத்துவ சிகிச்சையை பெற்றதோடு அவனது நிலைமை தற்போது சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை செவ்வாய்க்கிழமை மாலையில் போலீசில் புகார் செய்ததைத் தொடர்ந்து 18 மற்றும் 20 வயதுடைய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் விசாரணைக்கு உதவும் பொருட்டு மூன்று நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டதோடு இன்று போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டதாக Hafezul தெரிவித்தார். மாணவர் தங்கும் விடுதியில் அந்த மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இச்சம்பவத்திற்கு காரணம் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. குற்றவியல் சட்டத்தின் 147 ஆவது விதியின்கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Hafezul தெரிவித்தார்.